அமரர் பண்டிதர் திரு. சிறீரங்கம் அப்புத்துரை அவர்களுக்கு சமர்ப்பணம்!
மயிலங்கூடல் பெற்றெடுத்த மாணிக்கமே!
மயிலையம்பதி தத்தெடுத்த மரகதமே! வெள்ளை அங்கியுடன் மயிலைக்கு வந்த வெண்மதியே! சந்தணப் பொட்டு வைத்த சிறீரங்கரின் சூரியனே! எங்களையெல்லாம் கழுத்துப்பட்டி கட்டுங்கள் என்று சொல்லிவிட்டு நீங்கள் நேசித்தது அங்கவஸ்த்திரம் தானே! அதனால் தானோ என்னவோ அங்கவஸ்த்திரம் தன் அழகை உங்கள்மேல் இருந்து மேலும் உயர்த்திக்கொண்டது! எங்கள் கல்விக் கூடத்தில் இராஜநடை போட்ட வீரனே! தமிழை எனக்குக் காட்டிய தமிழ் அரசனே! அமெரிக்க மிஷன் பாடசாலையில் தமிழைத் தழைக்கச் செய்த பண்டிதரே! "பிரின்ஸிப்பல்" இல்லை "அதிபர்" என்றும் "ஒஃப்பிஸ்" இல்லை "அலுவலகம்" என்றும் இன்னும் பிற ஆங்கிலங்களைத் தமிழாக்கி எங்களை விதையிலேயே மாற்றிய வித்தகனே! காப்புக் காய்த்த அந்தக் கட்டைவிரல் கைகளால் கருணை காட்டிய கர்ணனே! நான் தவறு செய்தபோது அதே கருணையை என் கன்னத்தில் காட்டிய கம்பனே! தமிழுக்கு மூன்று சங்கம் இருந்தது அனைவரும் அறிந்ததே! உங்களுக்குத் தமிழ் மூன்றாவது கண் என்பதும் அனைவரும் அறிந்ததே! மீசை இல்லாத பாரதியை உங்கள் மூலம் கண்டுகொண்டேன்! அதனால் தான் கலைமகளுக்குப் பாரதியை காணிக்கையாய்ப் பதிவு செய்தீரோ! அந்தப் பதிவில் எனது நிழலும் இருந்ததையிட்டு உங்களால் நான் மகிழ்கிறேன்! தமிழே எங்களிடம் தமிழைத் தந்துவிட்டுத் தனியே எங்கே போய்விட்டீர்! அகரத்தை மட்டும் எம்மிடம் தந்துவிட்டு சிகரத்தில் வாழச் சென்றுவிட்டீரா! பேச்சிலும் சிந்தனையிலும் தமிழைக் காதல் கொண்ட தமிழனே! உன் காதலைத் தவிக்கவிட்டுவிட்டு தனியே எங்கே போய்விட்டீர்! தேவலோகம்பதியிலும் மயிலையம்பதிபோல் உங்கள் சேவையைத் தொடங்குங்கள்! நாங்களும் அங்கு வரும்போது உங்களின் பழையமாணவர் என்று சொல்லி வருகின்றோம்! தமிழ் தந்த தமிழுக்கு மாணவன் கு. அருண்குமார் பதிவு: 10/11/12 |
You've just received a new submission to your "நான் பிறந்த மண்ணே"
Submitted Information:உங்கள் பெயர்: சுந்தரலிங்கம் வி உங்கள் மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: அருண்குமார்! "சமர்பணத்தில்" உங்கள் குருதட்சணையைப்பார்த்தேன். அதற்காக அவர் உங்களிற்கு விட்டுச்சென்றதை இதில் பார்க்கிறேன். எண்ணத்தில் இருப்பதை எழுதியதில் இருக்கும் நேர்த்தி மிகவும் அருமை. இன்னும் எழுதுங்கள். பதிவு: 29/11/2012 |