(நாகேந்திரம் கருணாநிதி)
சைவசித்தாந்தத்தைச் சற்று விரிவாகப் பார்ப்போமானால்
முப்பொருள் உண்மைகள்
சைவ சித்தாந்தம் 1. பதி (இறைவன்), 2. பசு (ஆன்மா) (உயிர்கள்) 3. பாசம் (மலம்) (தளை) என்னும் மூன்றையுமே முப்பொருள் அல்லது உள்ப்பொருள் எனக் கூறி, அவற்றின் தன்மைகளை முப்பொருள் உண்மை எனக்கூறுகிறது. இவை மூன்றும் அனாதி என்றும் ஆதி அற்றது அதாவது முதல் முதலாகத் தோன்றாதது, தோற்றமும் இறுதியும் இல்லாதது, ஆக்கமும் அழிவும் இல்லாதது, யாராலும் ஆக்கப்படாததும் அழிக்கப்படாததும் ஆகிய என்றும் உள்ள பொருட்கள் எனக் கூறுகிறது. இதைச் சைவ சித்தாந்தம் இல்லது தோன்றாது, உள்ளது அழியாது என்ற “சற்காரியவாதம்” என்னும் விஞ்ஞான அடிப்படையில் நிரூபிக்கிறது. சத் – என்றும் உள்ள பொருள், காரியம் – செயற்படுவது, வாதம் – கொள்கை. இதன் விளக்கம் என்றும் உள்ள பொருள் எதுவோ அதுவே செயற்படும், இல்லாத பொருள் செயற்படாது. இலகுவாகச் “ சட்டியில் இருந்தால்த்தானே அகப்பையில் வரும் “ என்னும் பழமொழியை எடுத்துக்காட்டலாம்.