(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள் - 7. சிவப்பிரகாசம்
சிவப்பிரகாசம். கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தில்லை வாழ் அந்தணர்களின் பரம்பரையில் (தில்லை நடராஜருக்குப் பூசை செய்பவர்) வந்தவரும், புறச்சந்தான குரவரில் (4 நான்காவது) ஒருவரும், சித்தாந்த சாத்திரங்கள் 14 இல் சித்தாந்த அட்டகம் என்று போற்றப்படும் 8 நூல்களை அருளியவரும், புறச்சந்தான குரவரில் ஒருவரான (3 ஆவது) மறை ஞான சம்பந்தரின் மாணவருமான கொற்றவன் குடி உமாபதி தேவ நாயனார் (உமாபதி சிவாச்சாரியார்) அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். தில்லை மூவாயிரவருள் இவர் ஒருவரே சித்தாந்த ஞானத்தை உலகோர்க்கு விளக்கியவர் ஆவார். இந்நூல் சிவஞானபோதத்தின் சார்பு நூலாகவும், சிவஞானசித்தியாரின் வழி நூலாகவும் காணப்படுகின்றது. இந்நூல் முதல் 50 உம் பொது அதிகாரமாகவும், பின் 50 உம் உண்மையதிகாரமாகவும் கொண்ட 100 விருத்தப்பாடல்களைக் கொண்டு முப்பொருளைப் பற்றிச் சுருக்கமாக விளக்குகிறது. பொது அதிகாரத்தில் பாயிரப் பாடல்கள், பதி இலக்கணம், பசு இலக்கணம், பாச இலக்கணம், அவத்தை இலக்கணம் பற்றியும், உண்மை அதிகாரத்தில் ஆன்ம இலக்கணம், ஐந்து அவத்தை இலக்கணம், ஆன்மா உணரும் தன்மை, ஞான வாய்மை, ஞானத்தால் வரும் பயன், புனிதன் நாமம், அணைந்தோர் தன்மை பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்.