(நாகேந்திரம் கருணாநிதி)
திருவைந்தெழுத்து
இறைவன் தன்னை அடைவதற்கு ஆன்மாவுக்கு அருளிய திருமந்திரமே நமசிவாய என்னும் அருள் மந்திரம். திருவைந்தெழுத்தில் வரும் “சிவாயநம” சூட்சும பஞ்சாச்சரம். இது இருளை நீக்கி ஞானத்தைக் கொடுக்கும். “நமசிவாய” தூல பஞ்சாச்சரம். இது உலகியல் இன்பத்தைக் கொடுக்கும். திருவைந்தெழுத்தில் வரும் எழுத்துக்களின் உட்பொருள் சி – இறைவன், வா – சக்தி (அருள்), ய – ஆன்மா (உயிர்), ந – திரோதம் (வாழும் விருப்புத் தரும் மறைப்புச் சத்தி), ம – மலம் (மும்மலங்கள்).
“சிவனருள் ஆவி திரோதமலம் ஐந்தும்
அவனெழுத் தஞ்சின் அடைவாம் – இவனின்று
நம்முதலா ஓதில்அருள் நாடாது நாடும்அருள்
சிம்முதலா ஒதுநீ சென்று.”
சிவன், அருள், ஆன்மா, திரோதம், மலம், ஆகிய ஐந்தும் திருவைந்தெழுத்தின் பொருள் முறை ஆயினும். பக்குவப்பட்ட உயிர்கள் நகரம் முதலாக (நமசிவாய) உச்சரித்து வழிபட்டால் அருள் பொருந்தாது. சிகரம் முதலாக (சிவாயநம) உச்சரித்து வழிபட்டால் அருள் பொருந்தும்.
உண்மை விளக்கம் பாடல் எண் 42 இல்
“அண்ணல் முதலா அழகார் எழுத்தைந்தும்
எண்ணில் இராப்பகலற்று இன்பத்தே – நண்ணி
அருளா னதுசிவத்தே யாக்கும் அணுவை
இருளா னதுதீர இன்று.”
சிவம் முதலாகச் சொல்லும் அழகு பொருந்திய ஐந்தெழுத்தை இடைவிடாது தியானித்தால் அருளானது பொருந்தி உயிரை மல இருள் நீங்கும்படி செய்து கேவல, சகல நிலைகள் நீங்கி ஆனந்த உருவத்தை உடைய சிவத்தின் கண்ணே சேர்க்கும்.
இவ்வாறே உண்மை விளக்கம் பாடல் எண் 43, இல் நகரத்தையும் மகரத்தையும் முதலாகக் கொண்டு உச்சரித்தால் உறுதியாக மும்மலமும் நீங்கி உயிர் அருளைப் பொருந்தி பேரின்ப வாழ்வைப் பெறமாட்டாது. மாறி சிவாயநம என்று விதிப்படி ஓதினால் சிவபோகம் என்னும் அளத்தற்கரிய பேரின்பமாகிய வீட்டில் நிலைத்து வாழுகின்ற பெருமையை அடையலாம் எனவும், பாடல் எண் 44 இல் சிவபெருமான் அருளிய வேத, ஆகமங்கள், முதன்மை பெற்ற புராணங்கள், ஆனந்த நடனம், தத்துவங்களுக்களுக்கு அப்பாற்பட்ட மௌனமாய் இருக்கும் பரமுத்தியும் ஐந்தெழுத்தே ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.
திருவைந்தெழுத்தின் மகிமையால்த்தான் மாணிக்கவாசகப்பெருமான் சிவபுராணத்தை “நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க . . . எனத் தொடங்கினார். திருஞானசம்பந்தப் பெருமான் தான் வேண்டாத திருமணபந்தத்தை ஏனெனக்குத் தந்தீர் எனப் பாடியபின் தான் கேட்பதைத் தரவல்ல நமச்சிவாயப்பதிகத்தை “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஒதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பதும்
வேதநான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.” எனத் தொடங்கி
“நந்தி நாமம் நமச்சிவாயவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம்பந்தன்சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்தவல்லா ரெல்லாம்
பந்தபாசம் அறுக்கவல் லார்களே.” என முடித்துள்ளார்.
அப்பர் பெருமானும் தம்மை கல்லுடன் கட்டிக் கடலில் வீசிய பின்பு இறைஅருளால்க் கரை சேர்ந்த பின் பாடிய நமச்சிவாயத் திருப்பதிகத்தில்
“விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய பேகில் அவை ஒன்றும் இல்லாமையால்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.” எனவும்
“இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.” எனவும்
சுந்தரமூர்த்தி நாயனார் தனது நமச்சிவாயப் பதிகத்தில்
“இட்டனும்படி ஏந்துவார் இகழ்ந்து
இட்டநாள் மறந்திட்ட நாள்
கெட்டநாள் இவை என்றலாற கரு
தேன் கிளர் புனற்காவிரி
வட்டவாசிகை கொண்டடிதொநழுது
ஏத்து பாண்டிக் கொடுமுடி
நட்டவுனை நான் மறக்கினும்
சொல்லும் நாமம் நமச்சிவாயவே.” எனவும்
திருமூலர் திருமந்திரத்தில்
“ஒன்று கண்டேன் இவ்வுலகிற்கு ஒரு கனி
நன்று கண்டாய் அது நமச்சிவாயக் கனி” எனவும்
“சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே” எனவும்
பட்டினத்தடிகள்
“கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின் அஞ்செழுத்தை
சொல்லாப்பிழையும் . . . . . . . . எனவும்
இறைவன் திருவருளைப் பெறும் சிவமகா மந்திரமாகத் திருவைந்தெழுத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.