கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த கொடூர யுத்தம் ஏராளமான இழப்புக்களுடன் முடிவடைந்துள்ளது. ஆக்ரோசமான யுத்தத்தால் சாதிக்க முடியாத சில செயற்பாடுகளை அன்பாலும் புரிந்துணர்வினாலும் செயற்படுத்த முடிந்துள்ளது.
இலங்கையில் உள்ள குடிமக்கள் அனைவரும் இனங்கள், மதங்கள் அனைத்தையும் ஒரு பக்கத்தில் ஒதுக்கி வைத்து விட்டு அன்பு, புரிந்துணர்வு என்பவற்றைக் கையிலெடுத்தால் எமது நாடு சிறப்பானதாக மாற்றமடைந்துவிடும்.
யாழ் வலிகாமம் வடக்குப் பகுதியில் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள வீரமாணிக்கதேவன்துறையில் உள்ள கண்ணகி , முருகன் ஆகிய கோவில்கள் இவை.
கடவுளையும் இடம்பெயரச் செய்து காயப்படுத்திய கொடூரப் போர் இனியும் தேவையா?இடம் பெயர்ந்திருந்தாலும் முருகப் பெருமான் ஜோடியாக இருக்கிறார். ஆனால் எம்மில் எத்தனை பேர் போரில் கணவனை, மனைவியை இழந்து தவிக்கின்றார்கள்?
தேர் மிகவும் பழுதடைந்து அடிப் பீடம் தவிர்ந்த அனைத்தும் உக்கிய நிலையில் காணப்பட்டது. மிகவும் சிறப்பான முறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.இந்தக் கோவிலில் பூசகர் தற்போது யாழ் மண்ணில் உள்ளதாகத் தெரியவருகின்றது. குமாரசாமி எனும் பெயருள்ள இவர் இக் கோவிலில் பரம்பரைப் பூசாரியாவார்.
இக் கோவிலுக்கு அருகாமையில் ஒரு பிள்ளையார் கோவிலும் உள்ளது. இதுவும் மிகவும் பாழடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
கண்ணகை அம்மன் கோவிலில் பிள்ளையார் இல்லாத காரணத்தால் இந்தப் பிள்ளையாரில் பூஜை செய்துவிட்டே கண்ணகை அம்மனில் பூஜை வழிபாடுகள் நடப்பது வழமையாகும்.
தற்போது இந்தக் கோவில்கள் இரண்டும் படையினரால் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. யாழ் மாவட்டக் கட்டளைத் தளபதியின் மிகச் சிறந்த செயற்பாடு காரணமாக இக் கோவில்களில் மக்கள் வழிபட அனுமதிக்கபடவுள்ளனர்.
இக் கோவில்களுக்குத் தேவையான உடனடி செயற்பாடு புனர்நிர்மானமே ஆகும். அதற்கு பெருமளவு பண, பொருள் உதவிகள் தேவைப்படுகின்றன.
இக் கோவிகளுடன் தொடர்புபட்ட உறவுகள் இக் கோவில் பற்றிய அனைத்துத் தகவல்கள் மற்றும் தொடர்புகளுக்கும் இக் கோவிலைப் பற்றிய அக்கறை உள்ளவர்களை இணைப்பதற்குமான தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை நாம் இங்கு தந்துள்ளோம். இந்த தொடர்புகள் உங்களை கோவிலுடன் இணைப்பதற்கே அன்றி வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்பதையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
T.P No = 0094779741655
Email - myliddytemples@gmail.com